Forged Document Cancellation: Sec. 77A | Updates

Section 77 A of Registration Act Updates latest

For the backstory, read on…

மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்டப் பதிவாளருக்கு வழங்கி இந்திய பதிவுச் சட்டத்திற்கு, தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் Section 77A of Registration Act 1908. இது பற்றிய வழக்குகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

மீண்டும் இந்த வழக்குகள் இந்த மாதம் (மார்ச்) 26 அன்று விசாரணக்கு வர இருக்கிறது.

March 26 Hearing: Case Posted to 4th April, 2024.

The case was heard on 4th April 2024, and finally on 15th and 16th April 2024. The advocates were then asked to submit their written submissions by 22nd April 2024, and the judgment was reserved.

IGR’s Circular

பதிவுத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை

சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும், இந்தச் சட்ட திருத்தம் (77A)சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, பதிவுத்துறைத் தலைவர் (Inspector General of Registration), கடந்த 2023 செப்டம்பர் மாதம், மறு அறிவிப்பு வரும் வரை இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பிய பின், மனுக்கள் எல்லாம் அங்கங்கே தங்கிப் போயின.

What Prompted the Circular?

பதிவுத் துறைத் தலைவர் இந்தச் சுற்றறிக்கை அனுப்பத் தேவை என்ன?

இந்தச் சட்டத் திருத்தத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல் இருந்தாலும் கூட, இதில் உள்ள சட்ட பிரச்சனைகளை பற்றி இறுதியாக முடிவு எடுக்க, எல்லா வழக்குகளையும் ஒரு விரிவாக்கப்பட்ட அமர்வுக்கு (larger bench) அனுப்பப்பட்டு விட்ட காரணத்தினால், அந்த அமர்வின் தீர்ப்பு வரும் வரை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் பதிவுத்துறையால் எடுக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே எல்லா நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்க வேண்டிய தேவை பதிவுத் துறைக்கு ஏற்பட்டது.

Madras High Court Sets Up Larger Bench

சென்னை உயர்நீதிமன்றத்தின் விரிவான பெஞ்சு எதற்கு?

இந்தச் சட்டத்தை முன் தேதியிட்டு (retrospective effect) அமல்படுத்த முடியுமா? என்பது உயர் நீதிமன்றத்தின் முன்னுள்ள ஒரு முக்கிய கேள்வி.

இந்த சட்ட திருத்தம் சம்பந்தமாக ஒரு வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வந்த போது, இந்தச் சட்டம் என்றைக்கு அமலில் வந்ததோ (அதாவது 16 ஆகஸ்ட் 2022), அதற்குப் பின்னர் பதியப்பட்ட போலி பத்திர பதிவுகளை பற்றி மட்டும் தான் விசாரணை மேற்கொண்டு ரத்து செய்ய முடியும் என்று தீர்ப்பு வழங்கினார் நீதியரசர்.

ஏற்கனவே மற்றொரு நீதியரசர், இந்தச் சட்டத் திருத்தத்தில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை, எனவே பழைய போலி பத்திர பதிவுகளுக்கும் இந்தச் சட்ட திருத்தம் பொருந்தும் என்று கூறி இருந்தார்.

முதலில் குறிப்பிட்ட இந்தச் சட்ட திருத்தம் பழைய பத்திரங்களுக்குப் பொருந்தாது என அளிக்கப்பட்ட தீர்ப்பு, இப்போது தீர்ப்பளித்த நீதியரசரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது, பின்னர் மற்றுமொரு மூன்றாவது நீதியரசர் இன்னொரு வழக்கு விசாரணக்கு வந்தபோது தெளிவு படுத்தி, இப்படி மாறுபட்ட இருதீர்ப்புகள் உள்ள நிலையில், இந்த பிரச்சினையை ஒரு விரிவான அமர்வு தான் (larger bench) விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து, அதை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கும் தெரியப்படுத்திவிட்டார். இப்படித்தான் விரிவான அமர்வுக்கு வழக்கு சென்றுள்ளது.

விரிவாக்கப்பட்ட அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முடிவு, சென்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை நடந்து கொண்டும் இருக்கிறது. எனவே தான், பதிவுத்துறை தலைவர் எல்லா நடவடிக்கைகளயும் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவு இட்டுள்ளார்.

Larger Bench Proceedings

விரிவான அமர்வில் விசாரணை

சென்ற வாரம் 21ஆம் தேதி (மார்ச் 2024) விசாரணைக்கு வந்த போது, அதுவரை இந்தச் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய முழு விவரங்களையும் நீதிமன்றத்திற்கு தர வேண்டும் என்று நீதி அரசர்கள் உத்தரவிட்டு உள்ளனர். மீண்டும் விசாரணை இந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arguments Raised on Section 77 A

விரிவான அமர்வின் முன்னுள்ள பிரச்சினைகள்

இந்தச் சட்ட திருத்தம், முன்பு பதியப்பட்ட போலி பத்திரங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி மட்டுமல்லாமல் (retrospective effect), இந்த வழக்குகள் வேறு பல சட்ட பிரச்சனைகளையும் முன்னிறுத்தி உள்ளது. குறிப்பாக, மாவட்ட பதிவாளருக்கு இந்த அதிகாரத்தை தரக்கூடாது, ஏனெனில் அவர் சட்டம் படித்தவராக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை, எனவே அவரால் எது போலி பத்திரம் என்று கண்டறிய முடியாது, என்பது போன்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், இந்த போலி பாத்திரங்களை ரத்து செய்வது சம்பந்தமான வழிமுறைகள் விதிமுறைகள் பற்றி எந்த விதிகளையும் (rules) மாநில அரசு இயற்றவில்லை. பதிவுத் தலைவரின் சுற்றறிக்கைகளும், கடிதங்களும் மட்டுமே வழிகாட்டுதல்களாக உள்ளன. இது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்பது மற்றொரு வாதம்.

Issues framed for decision -Section 77 A

தீர்மானிக்கப்பட வேண்டியவை என்று நீதிமன்ற அமர்வால் வரையறுக்கப்பட்ட விஷயங்கள்

இந்த வாதங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, நான்கு முக்கிய பிரச்சினைகளை பற்றிய தீர்வுக்கான முயற்சியில் விரிவான அமரவு (Larger Bench) ஈடுபட்டுள்ளது.

  • i) பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள வாசகங்கள் (recitals), அத்தகைய ஆவணம் மோசடியாக செயல்படுத்தப்பட்டதா (executed) அல்லது பதிவு செய்யப்பட்டதா (registered) என்பதை தீர்மானிக்க ஆய்வு செய்யப்படலாமா;
  • ii) ஒரு ஆவணத்தில் விவரங்கள் மட்டுமே கேள்விக்குள்ளாகும் போது, அந்த ஆவணம் மட்டுமே செல்லுபடியற்றது என்று கருத முடியுமா அல்லது அந்த ஆவணங்களைக் கூட பதிவுச் சட்டத்தின் பிரிவு 77 ஏ இன் கீழ் சார்பதிவாளரால் ரத்து செய்ய முடியுமா;
  • iii) பதிவுச் சட்டம், 1908 இன் பிரிவு 22 ~ ஏ அல்லது 22 ~ பி க்கு முரணாக ஆவணங்களை பதிவு செய்வதற்கு மட்டும் பிரிவு 77 ஏ இன் கீழ் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?
  • iv) பதிவுச் சட்டத்தின் பிரிவு 77A இன் கீழ் அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவது இயல்பில் எதிர்காலமாக இருக்க முடியுமா (Prospective Date) அல்லது இயற்கையில் முன்தேதியிட்டு (retrospective date) இருக்க முடியுமா?

என்பனவாகும்..

Judgment Dated Feb 2

இதற்கிடையில், சட்டம் அமலுக்கு வந்த 16 ஆகஸ்ட் 2022 க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட ஒரு போலி பத்திரம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாவட்டப் பதிவாளரை ஒருவர் அணுகிய போது, மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி இப்போது எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியாது என மாவட்டப் பதிவாளர் திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அந்த விரிவான அமர்வுக்கு அனுப்பப்பட்ட பிரச்சினை, பழைய போலி பத்திரங்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்துமா என்பதை பற்றி ஆராய்வதற்குத் தானே ஒழிய (retrospective effect), இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததற்குப் பின் (prospective effect) பதியப்பட்ட போலிப் பத்திரங்கள் மீது விசாரணை நடத்தி முடிவெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற மனுதாரரின் வாதத்தை பிப் 2-ம் தேதி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வேறொரு அமர்வு.

ஆனாலும், மேலும் பல பிரச்சினைகளும் கூட தீர்க்கப்படாமல் இருக்கும் பின்னணியில், விரிவாக்கப்பட்ட அமர்வின் அதாவது லார்ஜர் பெஞ்சின் தீர்ப்பு வரும் வரை இந்த பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது தெளிவு. ஏனெனில் தீர்ப்புகள் எப்படி வந்தாலும், அவற்றை அமல் படுத்த பதிவுத்துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டால் அன்றி, மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் எந்த மனுவையும் வாங்க மாட்டார்கள்.

In Conclusion

இந்தச் சட்ட திருத்தம் கொண்டு வந்தது நீதிமன்றத்தின் தொடர் வற்புறுத்தலின் பெயரிலும் அறிவுரையின் பெயரிலும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்ட திருத்தம் வந்த பின்னரும் அரசின் இந்த நடவடிக்கையை நீதியரசர்கள் வெகுவாகப் பாராட்டினர். ஆனாலும், சட்டத்தை அமல் நடத்தும் போது முளைக்கும் பிரச்சினைகளை தீர்க்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்பது தான் உண்மை.

இப்போது நீதிமன்றமும், அரசும் இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

விரிவு நீதிமன்ற அமர்வின் தீர்ப்பிற்காக அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றார்கள். அடுத்த நகர்வு மார்ச் 26 ம் தேதிக்குப் பின்…



Originally Published on

Comments

One response to “Forged Document Cancellation: Sec. 77A | Updates”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *